02 January 2017

ஆந்தைகளின் மொழி ( அக்பர் பீர்பால் கதைகள்)

    
அன்று காலை , அக்பரைப்  பார்த்த உடனேயே அவர் அன்று என்ன  செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது.
  குதிரைச் சவரிக்கேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். 
  அக்பர் அன்று வேட்டையாடத் திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப்போக்கு! ஆனால் அவர் வேட்டையாடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார். 
   சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் 
          "நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?"என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும் ,
         "மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்கு கிடையாது." என்றார் பீர்பல்.
         "பொய் சொல்லாதே, பீர்பல் ! நான் என்ன செய்யப்போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டும்மென்றெ தெரியாது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலை பொழுதில் வேட்டை ஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?" என்றார்.
          "தங்களின் கருத்தே என்னுடைய கருதும் " என்றார் பீர்பல்.
          "அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்." என்றார் அக்பர்.
          "தங்களின் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்." என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார்.
          "பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்திருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்." என்றார்.

           " ஆகட்டும் பிரபு!" என்றார் பீர்பல்.
சற்ற நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார்.  காட்டினுள் நுழைந்தப்பிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு  காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட,அக்பரும் மற்றவர்களும் அவற்றைத் துரத்திச்  சென்று , கொன்று குவித்தனர்.
        திடிரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் எரிச்சல் அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன் மீது எறிய, பயங்கரமாக உறுமிக்கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
        மாலைக்குள் அகபர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
        மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.

      அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாக கவனித்த அக்பர், "இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்." என்றார் அக்பர். 
      "பிரபு ! அவற்றின் மொழி எனக்குத் தெரியும் !" என்றார் பீர்பல்.
      "அப்படியா ? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்?, அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!" என்றார் அக்பர்.
      "பிரபு !அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று மாப்பிள்ளையின் தந்தை. அவை வரதட்ச்சனையைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. மாப்பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது," என்றார் பீர்பல்.
           தொடர்ந்து " பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரக்காலம் அவகாசம் தந்தால் , மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது" என்றார்.
           "இது என்ன உளறல் ? மிருகங்களே இல்லாத காடுகள் அதற்க்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக்கொண்டது? " என்றார் அக்பர்.
           "அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!" என்றார் பீர்பல் .
            "ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!" என்றார் அக்பர்.
            "நான் உளறவில்லை பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்கள் இல்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதமுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது." என்றார் பீர்பல்.
             பளீரென முகத்தில் அறைந்தது போல் இருந்தது பீர்பலின் விளக்கம் அக்பருக்கு. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்து அக்பர் ,
            " பீர்பல், என் கண்களை நீ இன்று திறந்துவிட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்துக்கொண்டேன். இன்று முதல் வேட்டையாடுவதை  நிறுத்திவிடப் போகிறேன்" என்றார் அக்பர்.
           பீர்பலுக்குத்  தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை.
             "பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக்  கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல் " என்றார் அக்பர்.
              "சக்ரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி  என்னால் மிருகங்கள் அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!" என்று பீர்பல் கூறவே , அக்பர் பலமாகச் சிரித்தார்.