06 January 2017

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ( ஜெயகாந்தன்)


வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் 'திக்'கென்று என்னமோ உறைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாந்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்த பயத்தில்தான் அவனை அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டதும் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.
       அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடிரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்றுக்  கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் 'மப்ள'ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே! 
          முண்டாசை அவிழ்துத் தலையை நன்றாகச் சொரிந்துக் கொண்டான் கோனார். கோலனி  காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு.
            அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்து மஸ்லின் ஜிப்பா ; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி  மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பதுப் போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.
             அவன் சுப்பு கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் கால்களை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக்  கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய்  நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்போட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.
               வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைகத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின்- காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களைக் மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களை திறந்துப் பார்த்தார். அவனேதான்!
               அவனை துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார். அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க்  கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் கால்களைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்பு கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு 'கேட்'டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை.
               ஏனெனில் தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை,பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விரைத்துக் கொண்டு புழுதி மண்ணில் கிளம்பச் சிறுநீர் கழித்த பின் கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற 'தரிசன'ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் 'அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ' என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான்  துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக "தூ!தூ! வாயிலே கொசு பூந்துட்டது" என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.
                 அவன் அந்த காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகின்றார்களா என்று அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி;" இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு" என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின்  மூலம் ஒரு மௌனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைத் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த  உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, 'சரக் , சரக்' என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.
                அந்த அகந்தையும், அவனது  இந்த பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால் அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.
                 "இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதோ.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்.... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்ததையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை!  அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?..... என்ன பண்ணினாப் போவான்?.... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான்  முழிச்சேனோ?...."என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்த பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த 'அவனு'டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.
                 'கோனாருக்கு நல்ல உடம்புதான்..... தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! அனால், அடி  தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி  படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!.... அடிப்பட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே  ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து , வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது. "தண்ணி, தன்ணனி"ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப்  படாதோ! "திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!"ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன். தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து. அவன் கண்ணைத் திறந்து கருப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது.'
              "எலே பாப்பான், இருடா வந்து பார்த்துக்கறேன்'ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்.... நான் தண்ணி குடுத்தேனே, அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன மத்தவ மாதிரி, ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்னு போட்டு அடிக்கற ஆசையா? 'இப்படி திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி  வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே, நோக்கென்னாட தலையெழுத்து?ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை அடிச்சேன். அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திரும்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு  வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான். பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ? இப்போ திரும்பி தரப் போறான்,நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான். ஆனால் அதை நான் தாங்கணுமே! இந்தக் காலனிலே இருக்கிறவாள்  எல்லோருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா, அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்? என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன்  பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும்  சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி  உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது.
                     அவன், அவரையே, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும்  அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான். " நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படி பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா? இதோ, இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு ' குஞ்சுமணிக் கண்ணா!' என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா'ன்னு  கெஞ்சப்  போறாள். பாவம், அவளுக்கு உக்காந்த  இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி.....சொல்லிடணும்....." ஒரு அடி  தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும் ..... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு  சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?....
            "ஏய், சுப்பு! பார்த்துண்டு நிக்கறீயே .....ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா? என்று குரலைத்  தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.
             "அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான்  யோசிக்கிறேன்" என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.
              அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீத்தம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன்  பிள்ளையாண்டானுடன் அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள்.
                 சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீத்தம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன்  இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே "உம் ", ம்ஹீம்" என்ற ஹீங்காரங்களும் கையசைப்புதான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய்  ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீத்தம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.
                "இங்கேதான் பார்க்கறான் .... அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?" என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.
                "யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?" என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக்  கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.
               "அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவ்வுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஓடிச்சிண்டு, இந்த கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே ...."
                  "சொல்லு..."
                "பத்து  மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு போறவா வரவா எல்லோரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே...."
                 "ஆமா..."
                 "நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே ...அவன்தான். அந்த திருடன்தான் வந்திருக்கான், திருடறதுக்கு இல்லே , எல்லோருக்கும் திரும்பிக் குடுக்கறதுக்கு."
                  "குடுப்பான் .. குடுப்பான், மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாம். திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும் ..? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா கம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்" என்று அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி 'ஓ ' வென்று கத்தினாள் சீத்தம்மாள்.
                    அவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்க்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினார்.
                      இப்போது சீத்தம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்காந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தை கண்டு அஞ்சினர்.
                    கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. " என்ன இவன் ? பெரிய இவன் ! திருட்டு பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்.." மப்ளரை உதறிக் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான். ' ம் ' என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார்.
                   கோனார், தைரியாமாக  கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்காந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.
                  "எலே !.... உன்னை யாருன்னு இங்கே எல்லோருக்கும் தெரியும்.. இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு" என்று கோனார் சொல்லும் போது, "ஆமாம்பா....தகராறு பண்ணாம போயிடு... நோக்கு இடமா கிடைக்காது? என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார். அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி  பெல்ட்டோடு வைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை கோனாரிடம் கொடுத்துவிட்டு அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
                     கோனார் அந்த காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார். "என்னய்யா கோனாரே....முதலியார்கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா ...." என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார். "நன்னா இருக்கே நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துல திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுது? ஏன்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னா? நம்ப சுப்புணி பிள்ளை பட்டாபி இங்கே ஏதோ 'கோப்பேரெட்டி ' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசியா' விட்டெறிஞ்சிட்டு இந்த இடத்தைப் பிடிடான்னு சொன்னேனோன்னோ? நேக்கு அப்பவே பயம்தான் ... வயசுப் பெண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட காவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு....பாரேன்... அவனும் அவன் தலையும்.....கட்டால போறவன்...பீடி வேறே பிடிச்சுண்டு....என்ன கிரகசாரமோ?' என்று முடிவற்று முனுங்கிக் கொண்டிருந்த சீத்தம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா  என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி...." அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு...அவன் கையால எனக்கு அடி  வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறன். நமக்கென்ன?" என்று கூறிச் சீத்தம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.
                    "நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு. புருஷாள்ளாம் போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும். இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்.... கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்.....போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு. காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படி தைரியமா வெளிலே அனுப்புறது? ஓய்.....கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு 'கம்ப்ளேன்டு' குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்" என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீத்தம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தக் தெருவுக்கே அபாய அறிவுப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
              இதற்கிடையில், சுப்புக் கோனார் வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலைக் ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில் வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் 'சுரீர்' என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரதிக் கொண்டு காம்பவுண்டு கோட்டைத் தாண்டி ஓடின.
             கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீத்தம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்; "பாலுமில்லை , ஒண்ணுமில்லை, போங்கம்மா.......கன்னுக்குட்டி ஊட்டிபிடுத்து.... இந்த திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்" என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான் .
              திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, " மத்தியானத்துக்கு  கொஞ்சம் சீக்கிரமா வந்துடு" என்று குரல் கொடுத்தார். அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ? என்று எண்ணிப் பயந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து சுவரேறிக் குதித்து இங்கே சிக்கிக்கொண்டு, எல்லோரிடமும் தர்ம  அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்க்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.
               திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தக் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம், அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.
                    "அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸ்லே வேலை செய்யற நாயுடு, சைக்கிளிலே வந்தவன், சைக்கிளிலே உட்காந்தப்படியே ஒரு காலை தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே.....அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்கப் மாட்டான்னு நெனைச்சேன் ...இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைக்காரனாகவும் இருப்பான் போல இருக்கே...." என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் 'பிலுபிலு'வென வளர்ந்திருக்கிறது. தோளும், கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.
                     "ஐயையோ...கத்தியை  வேற எடுத்துண்டு வரானே .... நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்....இங்கேதான் வரான்!.." என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று 'படா'ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
                   அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.
                  "ஏண்டாப்பா....எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சா. அவனையெல்லாம் விட்டுவிட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே? இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா...நேக்குப் புரியறது...மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒம்பதாத்  தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு ..... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கடப்பாவையும் தூக்கிண்டு அலையறே?" என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.
                  அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். "அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா, உன் காலை வெட்டப் போறான்!" என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு.
                   "எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?" என்கிற அசட்டையாய் சைக்கிளில் ஏறியா பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான். சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன.  அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, 'படக்'கென்று அரை அடி நீளத்துக்கு 'பளபள'வென்று அதில் மடித்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்த பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திரும்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான்.
                       குஞ்சுமணி மெள்ளக்  கண்களைக் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார். 'நல்ல வேளை! தப்பிச்சே...ஆத்தை விட்டு வெளியே வராதே... பலி போட்டுடுவான், பலி!"
                அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.
               அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துளக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி  வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான்.
              அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை. அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும் , "வீட்டில் பெண் பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.
              " ஆமாம் ஆமாம் " என்று அவர்கள் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுக்காப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள். அப்படி போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.
                காலை பதினோரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான். வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான்.
                 இடுப்பில் துண்டைக் கட்டிக்  கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான். காலனியில் ஆளாவாரமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து 'தப தப'வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.
                 திடீரென்று,
           "மாமா...உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து..." என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.
                 அப்போதுதான் அவன் பயந்தான்....
             தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ? என்று சுற்றும் முற்றும் திருடன் மாதிரி பார்த்தான். " நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா? உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு...அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு..."
               அவன் சிரித்தான், அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக்கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோடு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான். அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை, " அம்மா பாத்தா  அடிப்பா...சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன் ...." அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.
                 ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில்  கட்டிக் கொண்டு அவன் வந்தான். திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! 'இது உன் வீடு' என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு. அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?' என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.
               'உஸ்' என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது. "இங்கேதான் இருக்கேன்.. வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ" என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை. குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.
                        "எல்லாம் எனக்கே எனக்கா ?"
                   "ம்....."
                  இரண்டு மூன்று சாக்லேட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது. "இந்தா! உனக்கும் ஒண்ணு" என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும்  தந்தபோது......
                       "ராஜி....ராஜி" என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது. "அம்மா தேடறா..." என்று அவனிடம் சொல்லி விட்டு "அம்மா! இங்கேதான் இருக்கேன்" என்று உரத்தக் கூவினாள் குழந்தை.
                      "எங்கேடி இருக்கே"
                   "இங்கேதான்.....திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்."
                  அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே  கொடுத்து, "அம்மா அடிப்பாங்க, இப்போ போயிட்டு அப்புறமா வா" என்று கூறினான் அவன்.
                   "மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா...இதோ! மடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷுக்குக் கூட..."
                    குழந்தைப் போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான். மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி,பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான்.நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான்.
                    குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீத்தம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று  கொண்டிருந்தது. போலீஸ்க்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன். "தெரியும்டா....பொல்லாத ரசீது... ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும், என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி  வந்ததோ, தொலைச்சுப்புடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே?" என்று மிரட்டினான் போலீஸ்காரன்.
                   "முந்தா நாளுங்க, எஜமான்" என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன. அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்ததைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார். முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோடி வந்தார். "உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடுத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?"
                        "வாக்கிங் ஸ்டிக்கைத்  தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார். "அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணின்டிருக்கே?" என்று குஞ்சுமணியைச் சீத்தம்மாள் அடக்கினாள்.
                      முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான். "இங்கே உனக்கு என்ன வேலை?" என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார். "இவன் ஒரு கேடி ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க, அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்."
                        முதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார். "என்னுடைய 'டெனன்டை' காலி பண்ணச்  சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே 'யூ கெட் அவுட்!"
                   முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான்.
                   "எஸ், ஸார்" என்று  இன்னொரு முறை சலாம் வைத்தான்.
             "அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது, திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிட்டு போ" என்று  கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.
             "ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம  மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படுறீர். நான் ஜெயிலுக்கு போகாத பல திருடன்களைப்  பார்த்துக்கிட்டுருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்." என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.
                 "என்ன கோனாரே?... நீயும் சேர்ந்துக்கிட்டு  யோக்கியன் மாதிரிப் பேசுறியா? நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே  தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?" என்று கேட்டபோது கோனார் தலையை சொரிந்தான்.
                  கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார். "இந்தாப்பா ... உன் கிட்டே நான் கை  நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு, நான் பார்த்துக்கறேன்...." என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.
                  அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தான். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது. காலையில்  பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான். குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார்.
                     குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடைப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரை பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீத்தம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது.
                      அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.
                       மதியானமாயிற்று , மாலையாயிற்று, மறுநாளும் ஆயிற்று...
                      இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும் அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.
                    அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி , திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது. மாடம் நிறைய இருந்த சாக்லேட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
                     "ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?" என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை.
                                                                                                (ஜெயகாந்தன்)