நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி-என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடலுக்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவரு மதிகேட்டேன்-இவை
அருள்வதில் உன்னக்கெதுந் தடையுள்ளதோ?